வியாழன், 29 செப்டம்பர், 2016

அடையாளங்களை தொலைக்கும் தமிழன்!

வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது. நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.

புதிய நாகரிகம் நல்லதுதான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன். இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியைதான். தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில்தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், நாமோ நவீன காங்கீரிட்  கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்? அதனால்தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது. கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.

நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும். நாம்  உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது.

பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே  பருகுகிறோம். இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது. முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட  நாம் பாதுகாப்பது இல்லை. வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று  புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும்தான். இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என  சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.

இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு வந்துவிடுவோம்.

நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்!

-த.ராம்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கேளடா மானிடா..

ஒரு நாள் காலை வேலையில், பாரதியார் தன் வீட்டு திண்ணையில் வழக்கம் போல இயற்கையை ஆராதித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தார். அந்த வேளையில், அத்திண்ணையில் சிதறிக்கிடந்த ஒரு சில அரிசி மணிகளை இரண்டு குருவிகள் கொத்தி தின்று கொண்டிருந்தன.

குருவியின் பசியைக் கண்ட பாரதியார், வீட்டிற்குள்ளே சென்று சோறு வடிக்க வைத்திருந்த அரிசி அனைத்தையும் கொண்டு வந்து, குருவிகள் இருந்த இடத்தில் தூவினார். அந்த கனம் அக்குருவிகள் பறந்தோடின. இதைக் கண்டு பாரதி கவலை கொண்டிருக்கும் வேளையில்... சென்ற அக்குருவிகள் இன்னும் பல குருவிகளைக் கூட்டிக்கொண்டு வந்து, கூட்டாக அந்த அரிசி மணிகளைத் தின்றன.

இதை ஈர்த்துப் பாரதியார் எழுதிய கவிதை தான்.குருவி மனிதர்களை ஏளனமாகப் பார்த்துப் பாடுவது போன்று...

"கேளடா...மானிடா...எம்மில் கீழோர் மேலோர் இல்லை... ஏழைகள் யாரும் இல்லை... செல்வம் ஏறியோர் எங்கும் இல்லை... வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழுமடா...கேளடா மானிடா.."

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

வேர்க்கடலை...

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.

வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும்.
 
வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட், ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது ,மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பெருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும் ஏனெனில் அதில்தான் நிறையச் சத்துகள் அடங்கியுள்ளது.மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.

இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது. வேர்க்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவுகிறது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

"பாண்டியர்களும் தமிழும்"

பாண்டிய மன்னர்கள் இல்லையென்றால் இன்று நாம் பேசுவதற்குத் தமிழ் மொழி இருந்திருக்காதோ என்று கூறத் தோன்றுகிறது.

தமிழுக்கு அழிவு வரும்போதெல்லாம் தங்கள் பலத்தால் தடுத்து நிறுத்தினர். எப்பொழுதும் ஆட்சியைவிட தமிழ் மொழியே பெரியதென வாழ்ந்தனர். பாண்டிய மன்னர்கள் பலரும் தமிழில் புலமை உடையவர்கள்.

கடைசங்க காலத்தில் ஆரியர்கள் தமிழையும் தமிழ் நாட்டையும் அழிக்க படையெடுத்து வந்தபோது அவர்களைச் சினம்கொண்டு அடக்கி வடக்கிலும் ஆட்சியை நிறுவியவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் இல்லயென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அழிந்திருக்கும்.

தமிழகத்தின் இருண்டக் காலமாக இருந்த களப்பிரர்கள் காலத்தில் (கிபி 3-7ம் நூற்றாண்டு) கடுங்கோன் பாண்டியன் களப்பிரர்களை விரட்டி கிபி 575ல் மதுரையில் முடி சூடினான். கடுங்கோன் இல்லையென்றால் 6ம் நூற்றாண்டிலயே தமிழ் அழிந்திருக்கும்.

2 முதல் 9ம் நூற்றாண்டுவரை சோழர்களைச் சிற்றரசர்களாக மாற்றி வைத்திருந்த பல்லவர்களையும் பண்டிய நாட்டுக்குள் விட வில்லை.
பல்லவர்களைத் தமிழ்நாட்டை விட்டு விரட்ட 850ல் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடந்த போரில் சிற்றரசர்களான சோழர்கள் பல்லவனுடன் இணைந்ததால் வெற்றி விளிம்பில் இருந்த பாண்டியர்கள் தோற்றனர். தமிழில் வடமொழி கலப்பு ஆரம்பித்தது. இல்லையென்றால் செந்தமிழ் இன்றும் இருந்திருக்கும்.

1216ல் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டு மீண்டும் தமிழை நிலைபெறச் செய்தான். சுந்தரபாண்டியன் வரவில்லையென்றால் முழுக்க வடமொழி கலப்புதான்.

இன்றளவும் தமிழ் மொழி இருக்க காரணம் பாண்டியர்கள். தங்கள் பெயரை நிலைபெறச் செய்ய போரிட்டதைவிட தமிழுக்காகவே போரிட்டனர். ஆட்சியை தக்கவைக்க சிற்றரசர்களாக இருந்ததும் இல்லை. பல்லவர் களப்பிரர்களுடன் கூட்டு சேர்ந்ததும் இல்லை. குப்தர்கள், மௌரியர்கள், சாளுக்கியர்கள் யாரையும் தமிழ்நாட்டுக்குள் விட்டதில்லை.

தனிநாயக அடிகள்

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் கண்ட தனிநாயக அடிகள்.
(02-08-1913 - 01-09-1980)

உலகத் தமிழ் தூதராகத் திகழ்ந்தவர் தனிநாயக அடிகள்."யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்னும் பெரும்மொழியை "ஒன்றே உலகம்'' எனத் தம் உலக உலாவால் மெய்ப்பித்தவர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த தனிநாயக அடிகள் பள்ளிக் கல்வியை முடித்து கத்தோலிக்க கிருத்துவசமய குருவாக சேவை செய்யும் பொருட்டு உரோமையில் 19-3-1938 இல் குரு பட்டம் பெற்றார்.

உரோமையிலிருந்து திரும்பி தூத்துக்குடி அருகில் உள்ள வடக்கன் குளத்தில் ஆசிரிய பணி ஏற்றார்.பின்னர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழோடு ஆங்கிலம் முதலாக 13 மொழிகளை கற்று பன்மொழிப் புலவராக விளங்கினார்.
அடிகளாரின் முயற்சியாலேயே அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் உருக் கொண்டது.அதன் தொடர்ச்சியாகவே 1964 இல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.

முதல் மாநாடு மலேசிய கோலாலம்பூரில் நடந்தது. சென்னை பாரீஸ் யாழ்பாணத்தில் நடந்த மாநாடுகளில் இவரின் பங்களிப்பு மிகுதியாகும்.

தமிழ் பண்பாடு என்னும் காலாண்டு இதழைத் தொடங்கி தமிழ் பண்பாட்டு கழக வாயிலாக நடத்தினார்.ஈழத் தமிழறிஞர் அருட் தந்தை தனிநாயகம் அடிகளாருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்துவோம்.

-கதிர்

தமிழரின் மறைந்த இசைக்கருவி

“இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். யாழ் வாசிப்பவன் ஆண்,பெண் முறையே பாணன், பாடினி என்னும் காரணப்பெயர் அறிந்ததுண்டு.

பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் மீட்டப்படுவதை எங்குமே இன்றுவரை பார்த்ததில்லை, கேட்டதில்லை. குழல் நிலைத்ததைப் போல் யாழ் நிலைத்து நீடிக்காமல் ஏன் அற்றொழிந்து போனது? இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று.

யாழின் தோற்றம்:

வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.
 
இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை
(3-16 அடிகள்)

‘பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்’ என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும்,

மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன.

கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது ‘இசையும் யாழும்’ என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.

வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே ‘பாணர்’ என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு….. என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.

யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:

யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.
அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புகழ்ந்தும் வந்துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை ‘ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்’ ‘பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி’ என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் ‘வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)’ என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், ‘வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)’ என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.
ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று."

தமிழர்களின் இசை பற்றிய நூல்கள் முச்சங்க காலத்துக்கு முன்னரே எழுதப்பட்டதாகவும்; அது மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்டது எனவும் அறியப்படுகிறது.

இயல், இசை, நாடகம் என கலையம்சங்கள் பொருதியிருந்ததாகவே பண்டைத் தமிழர் வாழ்வியலும் இருந்திருக்கிறது. இசை பற்றிய சில பண்டைய நூல்கள் காலத்தால் அழிந்துபோனாலும், இன்றும் தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, மருவிய வரலாறுக்கான சான்றுகள் கிடப்பதாய் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

எல்லா நாடுகளிலும் அந்த இசைக்கருவியின் பாரம்பரியம் இன்றும் புழக்கத்தில் இருந்தபடியே காலத்துக்கும், இசைக்கும் ஏற்றாற்போல் பரிணாமம் கொடுத்தபடி  வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பண்டையத்தமிழர்களின் யாழ் ஆரியர்களால் வீணைவடிவம் கொடுக்கப்பட்டு திரிபடைந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் சமூகத்தில் வீணையும், கர்நாடக சங்கீதமும் தெய்வீகமாகி வேறு தளத்தில் ஆளப்படுகிறது. தொன்மநூல்களின் வழி நரம்புக்கருவியான யாழ் போன்ற இசைக்கருவிகளைப் பற்றிப் 
பேசும் தமிழ் மரபு அதற்கான சிற்பங்கள், ஓவியங்கள், இன்னபிற சான்றுகளை வடிக்காமல் எப்படி கோயிற் சிற்பங்களில் கூட வேறெதையெல்லாமொ வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மன்னர்கள்! கைவிடப்பட்ட, கவனிக்காமல் புறக்கணிக்கப்பட்ட தமிழர் பாரம்பரியங்கள் இன்னும் எத்தனையோ என்கிற கேள்விகள்  தான் தேங்கி நிற்கிறது.