திங்கள், 30 மே, 2016

கண்ணுக்கு நன்மை தரும் தாமிர பாத்திர நீர்...


தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது.

தாமிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாமிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.

சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாமிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.

நஞ்சாகும் உணவுகள்...

Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்.

(MAIDA) மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்.

பிஸ்கட்,பிரட்,புரோட்டா,சத்து இல்லை என்பதால் அல்ல
அதில் விஷம் உள்ளது
இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்

சாக்லெட் வேண்டாம் (CHOCHALATES)

வேண்டிய அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

pizza,burgers தவிர்க்கவும் (JUNK FOOD NO)

கோதுமையை சொந்தமாக அறைத்து பயன்படுத்துங்கள் (WHEAT)
கடையில் உள்ள சப்பாத்திமாவு  உப்ப, மிருதுவாக்க கலப்படம் செய்யப்படுகிறது.

பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்

corn flakes,oats வேண்டாம்

கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி பயன்படுத்தவும்.

சர்க்கரை வேண்டாம் (SUGER)

தேன்,வெல்லம்,கருப்பட்டி பனங்கல்கண்டு பயன்படுத்தவும்

-black tea without sugar சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது

யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்
கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்
இது என்னுடைய வேண்டுகோள்

நாம் தான் முதலில் திருந்தவேண்டும்
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்

நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு,பணம் அல்ல,
ஆரோக்கியமும் ,குணமுமே உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு

Hyper activity because of this types of food also

அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்
இனியும் நாம் தூங்ககூடாது
அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் வலிக்கிறது,

பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்.

ஓர் ஆண் தெரிந்து கொள்ளும். விசயம். அவனை மட்டுமே மாற்றும்....
ஒரு பெண் தெரிந்து கொண்ட விசயம்...குடும்பத்தையே மாற்றும்....
எனவே. தயவுசெய்து. இதை உங்கள் குடும்ப பெண்களுக்கு புரிய வையுங்கள்...
மாற்றம். நிச்சயம்....

  நன்றி..

திங்கள், 23 மே, 2016

பூனை குறுக்கே சென்றால்...

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.
மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.
பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவையில்லை.

சனி, 14 மே, 2016

இசையின் வளர்ச்சி...

உணர்ச்சிகளுக் கேற்ப மனிதன் தோற்றுவிக்கும் ஓசைகளிலிருந்து இசை வளர்ச்சியுற்றது.

வீரம், மகிழ்ச்சி, அழுகை போன்றவைகளை உணர்த்தப் பாடப்படும் பாடல்கள் வெவ்வேறு ஓசைகளிற் பாடப்படுதலை நாம் காண்கின்றேம்.
இசையினால் மனிதனின் உள்ளத்தில் எவ்வகை உணர்ச்சியும் எழுப்பலாம் எனக் கருதப்பட்டது. ஆகவே கால இடங்களுகேற்ற இசைகள் பாடப்பட்டன. தமிழர் மிகப் பழைய காலத்திலேயே மிக்க இசைப்பயிற்சி உடையவர்களாயிருந்தார்கள். குழந்தைகளைத் தாலாட்டுதல் முதல் எல்லாவற்றுக்கும் இசை பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களைக் குறித்து அழும் அழுகைதானும் இசையுடையதாகும். ஆடவரும் மகளிரும் இசையைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். அரசர் அவைகளில் பாடி அவர்களை மகிழ்விக்கும் பாடன்மகளிர் பலர் இருந்தனர். கதைகள் நாடக முறையில் நடிக்கப்பட்டன. அவைகளுக்கு இசை வேண்டப்பட்டது.
 
  தமிழ் நாட்டில் வழங்கிய இசைக்கருவிகளுட் சில யாழ், வீணை, குழல், மத்தளம், கொம்பு, சங்கு, தாளம் முதலியன. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என வகையாக வழங்கின. வாய்ப்பட்டு மிடற்றுப்பட்டு எனப்பட்டது. தமிழில் வழங்கிய ஆதியிசைகள் ஏழு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உளை, இளி, விளரி, தாரம் என்பன.
  
பண்டைய நாளில் பாணர் என்னும் ஒரு வகுப்பினர் இருந்தனர். அவர்கள் இசை பாடுவதில் மிகத் தேர்ச்சியுடையவர். அவர்கள் ஊர் ஊராகச்சோன்று அரசரையும் செல்வரையும் பாடினார்கள். அவர்களின் இசைப்பாடல்களுக்கு உவந்து அவர்களுக்குப் பொருள் வழங்கினர்.

பெரிய புராணத்திலும் நாலாயிரப் பிரபந்தத்திலும் காணப்படும் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் திருப்பாணாழ்வாரும் பாணர் மரபினரேயாவர்.
திரு நீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணியாரே சைவத் திருமுறைகளுக்குப் பண் வகுத்தார்.
   இசைத்தொடராக மூன்று பொருள்கள் கருத்திற் கொள்ளத்தக்கன. பாடல்கள் எளிதில் பொருள் விளங்கத்தக்கனவாயிருத்தல் ஒன்று.
பாடல்களில் இனிய சொற்களும் மேலான கருத்தும் அமைந்திருத்தல் மற்றென்று ஆகும்.
பொருள் விளங்கமுடியாத பாடலில் நுகர்வதற்குரியது மூன்றில் ஒரு பகுதியேயாகும்.
   தமிழ் நாட்டில் தெலுங்கு கன்னட இந்திப் பாடல்கள் பெரிதும் இசைப்புலவர்களால் பாடப்பட்டு வந்தன. அவைகளின் குறையைத் தமிழ் மக்கள் அறியலானர்கள். தமிழ்மக்கள் இசையைக்கேட்டு நுகர்வதற்குத் தமிழ்ப் பாடல்களே வேண்டும் என்னும் கிளர்ச்சி எழுந்தது. இதனை எதிர்த்து வழக்காடிய ஒரு சார்பும் உண்டு. இப்பொழுது தமிழ் இசை உணர்ச்சி நாடெங்கும் கமழ்கின்றது.

வெள்ளி, 13 மே, 2016

உயிர்களின் உயிர்ப்பிடம் இயற்கை

காலம் காலமாக வரை முறையின்றி இயற்கை வளத்தை அழித்ததன் காரனமாக, சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதற்கான பலனை தற்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

உலகத்தின் வெப்பநிலை உயரத் தொடங்கியிருப்பதன் விளைவை இனிமேல் இன்னும் கடுமையாகச் சந்திக்கப்போகிறோம்.
 
  இப்பிரச்சினையில் இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்று, வீணான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் மரங்களை வளர்த்துக் காடுகளை உருவாக்குவது.
   இதற்கு, கியோட்டோ பருவ நிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐ.நா.வும் ஆதரவு அளிக்கிறது. மரங்கள், 'ஒளிச்சேர்க்கை' மூலம் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை பெருமலவில் உறிஞ்சிக் கொள்ளும் என்று கருதப்படுகிறது.
   ஆனால் இதைவிட இன்னும் தீவிரமாக அதிகப் பரப்பில் காடுகளை உருவாக்கினாலும் அதனால் பசுமைக்கூட வாயுக்களுக்கு எதிராக பெரிதாகப் பயனிருக்காது என்று கண்டுபிடித்துக் கூறுகிறார்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.
  
மரங்களை வளர்ப்பது இப்பிரச்சினையில் ஓரளவுதான் கை கொடுக்கும். காரணம், செடிகள் மரமாக வளரப் பல ஆண்டுகள் ஆகின்றன. கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளோ நீடித்திருக்கக்கூடியவை. எனவே பல நூற்றாண்டுகளுக்கு அவற்றின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
   இது தொடர்பான ஆய்வில், பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவேக் அரோரா, நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகத்தின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்கள் கூறும் போது, "உலகின் 50 சதவீத நிலப்பகுதியைக் காடுகளாக மாற்றினால்கூட, உலக வெப்பமயமாதலுக்கு அது பெரிதாகத் தடை போடாது. அப்படியே செய்வதாக இருந்தாலும், விளைநிலங்களை எல்லாம் காடுகளாக மாற்றுவது சாத்தியமில்லை. காரணம், அதிகரித்து வரும் மக்கள் தொகைதான்" என்கிறார்.
   காடு வளர்ப்பால் பொதுவாக நன்மைதான். என்றாலும், அது மட்டுமே உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பது இதில் இருந்து தெரிகிறது. இருந்தாலும் நாம் மரம் வளர்த்து காடுகள் அமைப்போம்.

நன்றி: தினத்தந்தி...

ஞாயிறு, 8 மே, 2016

இந்தியாவை உலுக்கிய பஞ்சம்..

வற்றிய உடல் ஒட்டிய வயிறுமாக, தோல் போர்த்தப்பட்ட எலும்புக் கூடுகளோ என்று நினைக்குமளவிற்கு பெரியவர்கள், குழந்தைகள் என ஒருசேர காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் பஞ்சத்தின் சாட்சி. தன் தாயின் வற்றிபோன மார்பகங்களில் தனக்கான உணவைத் தேடிக் கொண்டிருக்கும் குழந்தை துயரத்தின் வலியை உணர்த்துகிறது. நூற்றாண்டுகள் கடந்தும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தப் புகைப்படம் ஆப்ரிக்காவிலோ, சோமாலியாவிலோ எடுக்கப்பட்டதல்ல. 1876-78ல்  சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய கொடும் பஞ்சத்தின் போது வில்லோபை வாலஸ் ஹூப்பர் (Willoughby Wallace Hooper ) என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது.
1876-1878ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சென்னை மாகாணத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. மிக சரியாக இரண்டு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலில் தென்னிந்தியப் பகுதிகளான சென்னை, மைசூர், பம்பாய், ஹைதராபாத் போன்ற நகரங்களையும், இரண்டாம் ஆண்டில் கடைசியில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் பகுதிகளுக்கும் அடுத்தடுத்துப் பரவியது. சுமார் ஐந்து கோடியே 80 லட்சம் மக்கள் உணவு தானியங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டும், ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பட்டினியின் கொடுமையால் உயிரிழந்த உலகத்தின் மிகப்பெரிய பஞ்சம் இதுதான் என்கிறது வரலாற்றுத் தரவுகள்.
1876 மே 1-ல் எம்ப்ரஸ் ஆஃப் இந்தியா (Empress of India) என்ற பதவியை அரசி விக்டோரியா ஏற்ற அதே வருடம்தான் வறட்சியும் ஆரம்பித்தது. இந்தியா அரசி விக்டோரியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு ஏற்பட்ட மூன்று பஞ்சங்களில் இதுவே முதல் பஞ்சம். இந்த வறட்சிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியக் காரணம் பருவமழை பொய்த்துப் போனதுதான். அதுவரை சராசரியாக 27.6 என வருடந்தோறும் பெய்து வந்த மழையின் அளவு 1876-ல் வெறும் 6.3 ஆக குறைந்ததால் வறட்சி உச்சத்தைத் தொட்டது.

1858-ல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு சென்னை மாகாணம், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் புகைவண்டிகள்(ரயில்கள்), தானிய வணிகம், பருத்தி பயிரிடல் ஏற்றுமதி என பலவற்றை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது. மேலும் உணவு தானியங்கள் பயிரிடுவதைக் குறைத்து அவர்களுக்குத் தேவையான பருத்திகளை அதிகளவில் பயிரிடவும் தொடங்கினர். மூன்றாவதாக , கடுமையான வறட்சியால் தானியங்களின் உற்பத்தி முற்றிலுமாக குறைந்துவிட்ட போதிலும் ஏற்றுமதிக்கு வசதியாக ரயில்வே போக்குவரத்து இருந்ததால் ஏற்றுமதியாளர்களும், பெரும் செல்வந்தர்களும் இந்தியாவில் விளைந்த சொற்ப தானியங்களையும் ஏற்றுமதி செய்ததை நிறுத்தாதது, என்பன போன்ற காரணங்களால் பஞ்சம் தன் கோர பற்களால் ஏழை மக்களை வேட்டையாடிக் குவிக்கத் தொடங்கியது.
கட்டுப்பாடற்ற தானிய ஏற்றுமதியினால் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உணவு தானியங்கள் என்பது கனவாக மாறிவிட்டது. ஏற்றுமதிக்காக அதிகாரவர்க்கத்தினர் தானியங்களை பதுக்கிவிட்டதால் இவர்களிடம் பணம் இருந்தும் வாங்க முடியாமல் போனதால் கலவரம் வெடிக்கத் தொடங்கியது. மேலும் பிரிட்டனின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக வெளிநாடுகளில் இருந்தும் பஞ்சத்தை தவிர்க்க தேவையான உணவு தானியங்களை எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லக்கூடிய தஞ்சாவூரே தடுமாறும் அளவிற்கு உனவுப் பஞ்சமும், வறட்சியும், பட்டினி சாவும் ஏற்பட்டது. நிவாரண உதவிகளை முடக்கிவிட வேண்டிய இந்தக் காலகட்டத்தில்தான் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக (governor of Madras) இருந்த ரிச்சர்ட் க்ரென்வில் (Richard Grenville) பொழுதுபோக்கு சுற்றுலாவிற்காக அந்தமான், நிக்கோபார், பர்மா என பயணித்துக் கொண்டிருந்தார். அவர் சிலோன் சென்றடையும்போதுதான் சென்னையில் உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்டக் கலவரம் பற்றியே அவருக்கு தெரிய வருகிறது. உடனே அவர் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ராபர்ட் பல்வர் லிட்டன் (Robert Bulwer-Lytton) தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அப்போது இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையராக இருந்த ரிச்சார்ட் டெம்பிள் "டெம்பிள் வேஜ்’’ (Temple wage) என்ற புதிய ஊதியக் கொள்கையை உருவாக்குகிறார். இதன்படி பிரிட்டிஷ் அரசின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மட்டும் 450 கிராம் பருப்பும் ஒரு அனா காசும்
வழங்கப்பட்டது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் இதைவிடக் குறைவான அளவே வழங்கப்பட்டது. அதேசமயம் நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்கவும் செய்தனர். சென்னை நகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயும் இவ்வாறுதான் கட்டப்பட்டது. இந்த நிவாரணம் போதாது என்று கூறி போராட்டம் வலுத்ததன் விளைவாக 1877-ல் பருப்பின் அளவு 570 கிராமாக உயர்த்தப்பட்டாலும் பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை மலேரியா தாக்கியதில் மேலும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்தப் புகைப்படத்தை எடுத்த வில்லோபை வாலஸ் ஹூப்பர் அப்போது பிரிட்டிஷ் இராணுவத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த குதிரைப்படையில் (7th Madras Cavalry) பணிக்கு சேர்ந்தவர். புகைப்படக்கலை இவரது பொழுதுபோக்கு என்பதால் இராணுவப் பணியை செய்து கொண்டே புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தார். 1872-ல் ’’இந்தியாவின் மக்கள்’’ (The People of India) என்ற மிகப் பிரபலமான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டார். இந்த சூழலில்தான் அப்போது ஏற்பட்ட பஞ்சத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் தனது கேமராவினால் பதிவு செய்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் துயரத்தைக் உலகத்திற்கு காட்டியதில் வில்லோபை வாலஸ் ஹூப்பரின் புகைப்படங்களே முக்கியக் காரணமாக  இருந்தன. அதேசமயம் பஞ்சத்தைக் காட்டுவதற்காக பட்டினியால் வாடிக் கொண்டிருந்த பலரை அவரது ஸ்டுடியோவிற்கே அழைத்து சென்று புகைப்படம் எடுத்துவிட்டு, அவர்களுக்கு உணவைக்கூட அளிக்காமல் திருப்பி அனுப்பும்போது பலர் இறந்துபோயினர். இந்தக் கொடும் செயலால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் ஹூப்பர்...

அம்மா...

எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
'சாப்பிட்டு விட்டேன் '
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர !

வெள்ளி, 6 மே, 2016

அழகா? ஆபத்தா?..

உலக உருண்டை சுற்றும் வேகத்தைவிட வேகமாக, மாறிக்கொண்டே இருக்கிறது நம் நாகரிகம். புத்தம்புதிய ஆடைகளையும் பொத்தல் இட்டு அணிவது சென்ற தலைமுறையின் நாகரீகம் என்றால், உடல் முழுக்கத் துளையிட்டு வளையங்கள் ஊஞ்சலாட விடுவது இன்றைய நாகரிகம்! 

ஒரு காதில் கடுக்கன், புருவத்தில் அரை வளையம், ஒரு மூக்கில் மூக்குத்தி, வாய்க்கு அடியில் உள்ள தாடைப் பகுதியிலும் நாக்கிலும் சின்னக் கடுக்கன் எனத் தேடித் தேடிக் குத்திக்கொள்கிறார்கள். தொப்புளையும்கூட விட்டுவைப்பது இல்லை.

உடலை ரணமாக்கும் இதுபோன்ற கலாசாரங்களால், என்னென்ன பிரச்சனைகள் - பின்விளைவுகள் ஏற்படும்? தோல் நோய் சிறப்பு மருத்துவரான மைதிலி பேசுகிறார்.

'திடீர் திடீர் என எந்த மாற்றங்கள் செய்தாலும் நம் உடல் அனுமதிக்காது. காது குத்தும்போது மெல்லிய சதைப் பகுதியின் நடுவே குத்தாமல், கைத் தவறுதலாக மேலாகவோ இல்லை சற்றுக் கீழாகவோ குத்திவிட்டால், நாளடைவில் அந்த இடம் பெரிதாகிக் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், தோலில் காயம் ஏற்பட்டால், 'சோன்ட்ரிடிஸ்’ (Chondritis) என்ற கிருமித் தாக்குதலால் காது சிவந்துபோய் வலி ஏற்பட்டுக் காய்ச்சல் வரலாம்.

புருவத்தில் உள்ள முடியின் வேர்ப் பகுதியில் வளையத்தைக் குத்துவதால், முடி கொட்டலாம். தவிர ஒவ்வாமை ஏற்பட்டால், கண்ணுக்கும் அது பரவ வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சிலர் தங்கள் நாக்கிலும் ஸ்டட் குத்திக்கொள்கின்றனர். இது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை அழித்துவிடும். உணவின் சுவையே தெரியாமல் போவதோடு, நாளடைவில் நாக்கும் மரத்துப்போகும். இயல்பான பேச்சும் குளறுபடியாகும். குத்திய இடத்தில், பூஞ்சைக் காளான் தாக்கி கேண்டிடியாசிஸ் (Candidiasis) பாதிப்பு ஏற்பட்டு, வாய் முழுவதும் புண் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
இதேபோல, வாய்க்குக் கீழே ஸ்டட்டைக் குத்திக்கொள்வதால் மியூகோசில் (Mucocele)  என்ற நீர் நிரம்பிய சிறு கட்டி உண்டாகி துன்பம் தருவதோடு, உமிழ் நீர்ச் சுரப்பும் தடைபடும். குத்திய இடத்தில் குடியேறும் தொற்றுக் கிருமிகள், பல்லுக்கும் பரவி வலி கொடுக்கும்.
நாகரிகம் என்ற பெயரில், இப்படி உடலில் துளையிட்டு வளையங்களைக் குத்திக்கொள்வதால், அந்த இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படுவதுடன், பின்னாட்களில் கிலாய்டு (Keloid)  என்ற தடிமான தழும்புகள் உண்டாகும். தொற்று நீக்கம் செய்யப்படாத ஊசியால் குத்திக்கொண்டால், 'ஹெபடைடிஸ்’ (Hepatitis)  வைரஸ் கிருமித் தாக்குதலால் அரிப்பு, புண், சீழ் வடிதல் என அடுத்தடுத்த பிரச்னைகள் உருவாகும். வெள்ளி, தங்கம் போன்ற உலோக ஆபரணங்களை நமது சருமம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், நிக்கல் போன்ற உலோகங்களை ஏற்றுக்கொள்ளாது. நிக்கல் அணிந்தால் தோலில் அரிப்பு ஏற்பட்டு, புண், சீழ் எனப் பிரச்னைகள்தான் ஏற்படும்'' என்கிறார் மைதிலி.

நரம்பியல் சிறப்பு மருத்துவரான வே.முருகன், 'நம்முடைய பின்னங்காதில் தொடங்கி முகம் முழுக்க வேர்போல நரம்புகள் பரவி இருக்கின்றன. அனுபவம் இல்லாதவர்கள் தவறுதலாக இந்த நரம்புகளில் குத்திவிட்டால், முதலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அடுத்ததாக ஒரு பக்கத் தலைவலி உண்டாகும். மூளைக் காய்ச்சல் வரலாம். பாதிக்கப்பட்டது முக்கிய நரம்பு எனில், மூளையின் குறிப்பிட்ட செயல்பாடும் நின்றுவிடும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற விபரீதமான விஷயங்களைத் தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறப்புக் கவனத்துடன் இருக்க வேண்டும்'' என்கிறார்.
 
நன்மையும் உண்டு!
அக்குபிரஷர் மருத்துவர் வெற்றிவேல், கூறுகையில், ''எல்லா விஷயங்களையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டியது இல்லை. மனிதனின் உடல் முழுவதும் 450 அழுத்த நிலைகள் இருக்கின்றன. ஒவ்வோர் இடத்திலும் தொடு உணர்ச்சி மூலம் பல்வேறு பலன்களை உடலுக்குக் கொடுக்க முடியும். மூளைக்கு அருகில் இருப்பதால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பதால்தான் காது குத்திக்கொள்கிறோம். காதின் பின் பகுதி வழியாக நரம்புகள் வந்து முகம் மற்றும் அனைத்துப் பகுதிக்கும் உணர்ச்சிகள் பரவும். பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகச் செயல்படவைக்கும். மூக்குத்தி அணிவதால், முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள்போல் சில நரம்புகள் நாசித் துவாரத்தில் இறங்கிக் கீழே வரும். மூக்கு துவாரத்தின் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். தங்க மூக்குத்தி அணிவதால், உடல் உஷ்ணம் குறையும். அதனால்தான் காது, மூக்குப் பகுதியில் துளையிடுவதைக் காலம் காலமாகக் கடைப்பிடிக்கின்றனர்.''

- நா.சிபிச்சக்கரவர்த்தி
  நன்றி : டாக்டர் விகடன்