வெள்ளி, 22 ஏப்ரல், 2016

மாலைத்தீவு(மாலத்தீவு)

மாலைத்தீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும். இங்கு நிலம் 2.3 மீற்றர் மட்டுமே உயர்கிறது. கட்டுமானங்கள் காணப்படும் பிரதேசங்களில் செயற்கையாக நிலம் சில மீற்றர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 20 சதம மீட்டர் உயர்ந்தது, இது தொடந்து உயரும் என்பதே பொதுவான கருத்தாகும், எனவே இது மாலைத்தீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது

கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாசார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.

மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வுபற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.

1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் "ஏவிட்டா"(திவெயி) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயே மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கிப் பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள்மீது எழுப்பப்பட்டன எனக் கருதுகின்றார்.

மாலைத்தீவின் வரலாற்றின்படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்பு நிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைத்தீவில் தங்கும்படியாயிற்று. அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைத்தீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தானெனக் கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைத்தீவை ஆண்டார்கள். இவர்கள் தங்களைத் தமிழரின் வழித்தோன்றல்களெனக் கூறுகின்றனர்.

இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாகக் காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

1988 இல் இலங்கை தமிழ் ஆயுதக் குழு ஒன்று மாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது.

2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக மாலைத்தீவின் சில பகுதிகள் நீருள் மூழ்கிப் பலர் வீடுகளை இழந்தனர். 1-4.5 மீட்டர் உயரமான அலைகள் தாக்கின. இப்போது மாலைத்தீவுகளின் நிலப்பட வரைஞர்கள் மாலைத்தீவுகளின் வரைபடத்தை மீள வரைகின்றனர். இது அரசும் மக்களும் என்றோ ஒரு நாள் மாலைத்தீவுகள் முற்றாக உலக வரைபடத்திலிருந்து இல்லாது போய்விடுமென அஞ்சச் செய்கிறது.

மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தைத் தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக அமுலில் உள்ளது. இஸ்லாம் மதம் வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும். முஸ்லிம்களின் முக்கிய நாளான வெள்ளிக் கிழமைகளில் மதிய நேரத்துக்குப் பின்னர் வியாபார நிலையங்கள் மூடப்படுகின்றன. மாலைத்தீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன. மாலேயில் உள்ள பெரிய பள்ளிவாசல் பாக்கிஸ்தான், புருனை, மலேசியா, பாரசீக வளைகுடா பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது.

ஐவேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும். மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும், ரமழான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேளையில் மூடப்படும். மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் நேரடித் தொடர்பைப் பல நூற்றாண்டுகளாகக் கொண்டிருக்காதபடியால் இங்கு பழைய சமயங்களின் நம்பிக்கைகள் இஸ்லாம் சமயத்தோடு சேர்த்து பேணப்பட்டுள்ளன. அசுத்த ஆவிகள்பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும். இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களைப் பின்பற்றுகின்றார்கள்.

மாலைத்தீவுகளில் ஏனைய கலாச்சார அம்சங்களைப் போலவே அதன் இசையும் காலங்காலமாக மாலைத்தீவுகளுக்கு வந்த பிற காலாசாரங்களின் பாதிப்பைத் தன்னிடம் கொண்டுள்ளது. இதன் இசையில் மலேசிய, இந்திய, கிழக்காபிரிக்க அரபு தாக்கத்தை முதன்மையாகக் காணலாம்.

மிகப் பிரசித்தமான உள்ளூர் இசை "போடுபெரு" என அழைக்கப்படுகிறது. இது மாலைத்தீவுகளில் 11ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது. இது கிழக்காபிரிக்க சாயலைக்கொண்டுள்ளது. இது ஒரு நடன இசையாகும். தலைமைப் பாடகர் ஒருவரோடு, கூட 15 பேர் கொண்ட குழுவினரால் இசைக்கப்படும். இக்குழுவில் மணி மற்றும் கிடை தவாளிப்புகள் வெட்டப்பட்ட மூங்கில் இசைகருவிகளாகப் பயனபடுத்தப்படும். போடுபெரு பாடல்கள் மெல்லிசையில் ஆரம்பித்துப் பின்னர் வேக இசைக்கு மாறும் அதேவேளை நடனத்தின் வேகமும் அதிகரிக்கும். பாடல் வரிகள் பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும். சிலவேலைகளில் கருத்துகளற்ற சத்தங்கள் கொண்டும் பாடல்கள் அமைக்கப்படுவதுண்டு.

பாரசீக வளைகுடாவில் இருந்து வந்த அரேபியர்களால் கிபி 17வது நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படும் "தாரா" இசை மாலைத்தீவுகளின் இன்னொரு முக்கிய இசை வகையாகும். இதில் சுமார் 22 பேர் இரண்டு நிரல்களில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இசைப்பார்கள். ஆண்கள் மட்டுமே இதனை இசைப்பது வழக்கமாகும். போடுபெரு இசைகளைப் போலவே இதுவும் மெல்லிசையாக ஆரம்பித்து வேக இசையாக மாறும்.

"கா ஒடி லாவா" என்பது உடல் உழைப்பு தேவையான வேலைகளின் முடிவில் இசைக்கப்படும் பாடலாகும். இது முதலாவது முகம்மது இமாதுதீன் (1620-1648), என்ற சுல்தானின் காலத்தில் மாலே கோட்டைச் சுவர் கட்ட உதவிய தொழிளாலருக்காக எழுதப்பட்டதாகும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் மூன்றாம் முகம்மது சமூசுதீன் என்ற சுல்தான "இலங்கிரி" என்ற இசைவடிவை அறிமுகப்படுத்தினார். இது தாரா இசையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டதாகும்.

"பொலிமாலாஃபாத் நெசுன்" என்ற பாடல் சுல்தானுக்குப் பரிசுகள் வழங்கும்போது பாடப்படும் பாடலாகும். சுமார் 24 பெண்கள் இப்பாடல்களை இசைப்பது வழக்கமாகும். 1968இல் குடியரசான பிறகு சுல்தான் ஒருவர் இல்லாத காரணத்தால் இது இசைக்கப்படுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக